Enter your Email Address to subscribe to our newsletters

வயநாடு, 27 ஜூன் (ஹி.ச.)
கேரளத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
அயோத்தி ராமர் கோயிலுக்கு நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், காணிக்கைகளை வழங்கி உள்ளனர். இப்போது, அந்த காணிக்கை திருடப்பட்டதாக தெரிகிறது. இதனை துரதிருஷ்டவசமானதாகவும், அவமானகரமானதாகவும் நான் கருதுகிறேன்.
இந்த காணிக்கை பொதுமக்கள் வழங்கியது. பெண்கள் தங்க ள் சேமிப்பில் இருந்தும் வீட்டில் இருந்தும் வழங்கியுள்ளனர்.
ஏழை மக்களும் வழங்கியுள்ளனர். இவை பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நிதி மட்டுமல்ல. சாதாரண குடிமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி இவை. இதற்கென பிரத்யேகமாக ஒரு இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கு யார் பொறுப்பு? நீங்கள்தான் இதைச் சேகரித்தீர்கள் என்றால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கடந்த 7-ம் தேதி தகவல் வெளியானது.
இதையடுத்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேச அரசு கடந்த 13-ம் தேதி சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது. இக்குழு தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூன் 25ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜூன் 26ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b