Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீவில்லிபுத்தூர், 28 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், அதற்கு தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ கார்த்திக்கின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ கார்த்திக், மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த முயன்றார்.
அப்போது அங்கிருந்த திமுக-வைச் சேர்ந்த மம்சாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் சுஜிதா மேரியின் கணவர் தங்கமாங்கனி மற்றும் அவருடன் இருந்த இருவர், எம்எல்ஏ கார்த்திக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ கார்த்திக் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சட்டவிரோத மணல் அள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தங்கமாங்கனி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதி ஒருவருக்கே மிரட்டல் விடுக்கும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b