Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 29 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்,
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த முறை என்றும் இல்லாத அளவிற்கு ஒடுக்கப்பட்ட ஆசிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவில் கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ஒரு கொள்கையை உருவாக்கி மாணவர் பருவத்திலேயே பயிற்சியளிக்க வேண்டும்.
இதுவரை நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் இந்தியா தகுதிச் சுற்றில் கூட வர முடியாத நிலையில் இருப்பது விளையாட்டு துறையின் பலவீனத்தை காட்டுகிறது.
எனவே அதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கால்பந்து விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளையும் விளையாட்டு மைதானங்களையும் மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அவரிடம் தவெகவுக்கு ஆதரவு அளித்தது நிர்ப்பந்தத்தின் பேரிலா? என கேட்டதற்கு,
தவெக அரசு அமைய நாங்கள் நீண்ட ஆலோசனைக்குப் பின்பே ஆதரவு அளித்தோம். யாரும் எங்களை நிர்ப்பந்தம் செய்யவில்லை என்றார்.
அவரிடம், மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜிநாமா செய்து விட்டு முதலமைச்சர் விஜய் வர சொல்லியதாக வைகோ கூறியது தொடர்பாக கேட்டதற்கு,
அதை வைகோவிடம் கேட்டால் முழுமையான தகவலை தருவார்.
கருத்து என்ற பெயரில் அரசியல் நெறிமுறைகளையும் சட்ட வரம்புகளையும் மீறுவதை கம்யூனிஸ்ட் எப்போதும் விரும்பியது இல்லை. அதே சமயம் விஜய் அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தால் அது ஏற்கத்தக்கல்ல.
நாங்கள் எந்தவொரு குதிரைபேரத்தையும் விரும்புவதும் இல்லை. ஏற்பதும் இல்லை.
சோபா அரசியலுக்கும் கல்லாப்பெட்டி அரசியலுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எதிரானவர்கள். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதோ விலை பேசுவதோ கம்யூனிஸ்ட்டுக்கு பொருந்தாது.
அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே நாங்கள் அதை நிராகரிக்கிறோம்” என்றார்.
ஒவ்வொரு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது குறித்து கேட்டதற்கு,
வெள்ளை அறிக்கை என்பது அரசின் உண்மையான அறிக்கையாகவும், அரசு அடுத்து எத்தகைய கொள்கை வழியில் நகரப்போகிறது என்பதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என வீரபாண்டியன் பதில் அளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN