Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரப்பிரதேசம், 05 ஜூன் (ஹி.ச.)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நொய்டா செக்டார் 74-ல் அமைந்துள்ள ஐவி கவுண்டி குடியிருப்பு வளாகத்தில் இன்று (ஜூன் 5-ம் தேதி) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குடியிருப்பின் ஒரு அடுக்குமாடியில் திடீரென பற்றிய தீ, அப்பகுதி முழுவதும் புகைமண்டலத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் உடனடியாக களமிறங்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
தீ விபத்து குறித்து அறிந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவத்தை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆரம்பகட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக இது வரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே சேத மதிப்பு மற்றும் விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்.
Hindusthan Samachar / vidya.b