Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 06 ஜூன் (ஹி.ச.)
திருமலைக்கு வந்து ஸ்ரீவாரியை தரிசிக்க விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) பயன்பெறும் வகையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்.ஆர்.ஐ. பக்தர்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன காலக்கெடு 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி,
இந்தியா வந்த 30 நாட்களுக்குள் என்.ஆர்.ஐ. பக்தர்கள் தங்களது அசல் பாஸ்போர்ட் மற்றும் அதன் நகலை சமர்ப்பித்து, திருமலையில் உள்ள சுபதம் வழியாக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த குறுகிய காலக்கெடு காரணமாக பலர் சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை பரிசீலித்த தேவஸ்தானம், காலக்கெடுவை 90 நாட்களாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா வந்த மூன்று மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் என்.ஆர்.ஐ. பக்தர்கள் ஸ்ரீவாரியை தரிசிக்க முடியும்.
ஆபன்ன ஹிருதய திட்டத்திற்கு வரவேற்பு
இதற்கிடையில், தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் ‘ஸ்ரீ வேங்கடேஸ்வர ஆபன்ன ஹிருதய’ திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு, அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து மொத்தம் 5 பேருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன வசதி வழங்கப்படுகிறது.
இதற்காக, தரிசனத்திற்கு முந்தைய நாள் திருமலையில் உள்ள தானதாரர் பிரிவில் நன்கொடை செலுத்த வேண்டும். மேலும், வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுக்காக ஒருவருக்கு ரூ.500 வீதம், 5 பேருக்கு மொத்தம் ரூ.2,500 செலுத்த வேண்டும்.
நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு மறுநாள் மாலை 4 மணியளவில் ஸ்ரீவாரி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும்.
தானதாரர்களின் வசதிக்காக திருமலையில் தனி கவுண்டரும் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA