Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச)
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எத்தனை ரயில் நிலையங்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலை தாக்கல் செய்ய இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதைகள், லிப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரியிருந்தார்.
அதேபோல், ஞானபாரதி தாக்கல் செய்த மற்றொரு மனுவில், பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள ரயில் நிலையங்களின் விவரப்பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ