Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 ஜூலை (ஹி.ச.)
கோவை கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், உலக பிராமணர் நல மன்றம் சார்பில் சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக பிராமணர் நல மன்றத்தின் தலைவர் சி.வி. கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஆர்.எல்.என். சிவக்குமார், செயலாளர் ஆர். ராஜ்மோகன் ஆகியோர் ரிப்பன் வெட்டி இயந்திரத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலக பிராமணர் நல மன்றத்தின் தலைவர் சி.வி. கிருஷ்ணமூர்த்தி,
சமூகப் பொறுப்புணர்வு பணிகளின் ஒரு பகுதியாக மாணவிகளின் சுகாதார வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இப்பள்ளியில் பயிலும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த 21 மாணவ, மாணவியருக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டதாகவும், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த சேவைகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து மேற்கொள்ள உலக பிராமணர் நல மன்றம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மன்றத்தின் பொருளாளர் கோவிந்தகிருஷ்ணன், ஆலோசகர் நடராஜன், குழு உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J