Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 11 ஜூலை (ஹி.ச.)
மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் சிபிஐ-எம்; கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, மயிலாடுதுறையில் சிபிஐ-எம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கூறியதாவது,
கரூர் மாவட்டத்தில் 4 கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்களை 3,330 பேருக்கு 1963-ஆம் ஆண்டு அன்றைய தமிழக அரசு, இனாம் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில், அங்கு சாகுபடி செய்து வந்த விவசாயிகள், குடியிருந்த மக்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கி, அவர்கள் நில உடைமையாளர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என இந்து சமய அறநிலையத்துறை கடந்த 9-ஆம் தேதி கடிதம் வழங்கியுள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்ட இடங்களில் பல தலைமுறைகளாக சுமார் 10,000 குடும்பத்தினர் குடியிருந்தும், விவசாயம் செய்தும் வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த இடங்கள் கோயிலுக்கு சொந்தமானது என்றும், இதற்கு பட்டா கொடுத்தது தவறு என சிலர் தொடுத்த பொதுநல வழக்கு காரணமாக அந்த இடங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜீரோ மதிப்பீடு செய்து, அவற்றை விற்பதற்கோ, வாங்குவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் எந்த காலத்திலும் கோயில் பெயரில் இல்லை. ஆனால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் சீனிவாசன் ஆகியோர், இந்து கோயில்களுக்கு சொந்தமான இந்த இடத்தை ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனியாருக்கு பட்டா வழங்கப்போவதாக நேற்று உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்கள்.
இந்த 4 கோயில்களை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் பயனாளிகள் 3000 பேரும் இந்துக்கள்தான். இவர்கள் அனைவருக்கும் 1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் பட்டா உண்டி தான் மாற்றப்படவில்லை.
இந்த இடம் அவர்கள் அனுபவத்தில் தான் உள்ளது. எந்த ஆவணத்திலும் இது கோயில் இடம் என்று எந்த பதிவும் இல்லை. பாஜக தலைவர்கள் இவ்வாறு பொய்யான செய்தியை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு, காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை தடுப்பதற்கோ, திசை மாற்றுவதற்கோ, மின்சார திட்டம், சிறிய அணைக்கட்டுகள் கட்டுவது உள்பட எந்தத் திட்டங்களையும் கொண்டு வருவதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என 2018-ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
அந்தத் தீர்ப்பில் பெங்களூருவில்; வசிக்கும் மக்களுடைய குடிநீர் தேவைக்காக 4.75 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு சட்டரீதியாக எந்த வாய்ப்பும் இல்லை. இருப்பினும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு முயற்சிக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த பிரச்னை தொடர்பாக தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் எதிர்ப்பை ஒருமித்த குரலாக, காவிரி மேலாண்மை வாரியம், மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றில் முறையிட வேண்டும்.
தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்கு வலியுறுத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் தர வேண்டும்.
கர்நாடக அரசு ஜூலை மாதம் வரை நமக்கு 42 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போய் உள்ளது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை என்பது எதார்த்தமாக இருந்த போதிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பற்றாக்குறை காலங்களில் எப்படி நீரை பகிர்ந்து கொள்வது, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் அளவை கணக்கிட்டு, தமிழ்நாட்டினுடைய தேவையின் அடிப்படையில் பற்றாக்குறை காலத்தில் நீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
சில அரசியல் கட்சிகள் சொல்வது போல தமிழக முதல்வர் இதனை கர்நாடக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெற முடியாது. அதனை செயல்படுத்துவதற்காக உள்ள காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழுவிடம் முறையிட்டு, நமது பங்கை பெற வேண்டும்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக 2014, 2015, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.
மேகதாது அணை கட்டுவதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஒரு திருத்தத்தை கொடுத்தார். அந்த திருத்தத்தை அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டார்கள்.
விவசாயிகளைப் பொறுத்தவரை புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அப்படி ஒரு கோரிக்கை முன்வைப்பது தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
2033-ஆம் ஆண்டு வரை எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 2033-ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.
இதனை எதிர்த்து காவிரி நதியை பயன்படுத்தக்கூடிய தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுமே மேல்முறையீடு வழக்குகளுக்கு போக முடியாது என்கிற நிலையில், புதிதாக நடுவர் மன்றம் தேவையில்லை என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN