Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 18 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கனிஷ்கா தேவி, பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த அவர் மீது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவி கனிஷ்கா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு அரசுப் பேருந்து ஓட்டுநரின் அதிவேகமும், கவனக்குறைவுமே காரணம் என குற்றம்சாட்டிய உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பனங்குளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேகத்தடை அமைக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b