இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மதுரை, 18 ஜூலை (ஹி.ச) மதுரை பெருங்குடி தனியார் விடுதியில் யங் இந்தியா தொழில் முனைவோர் அமைப்பின் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்று
இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


மதுரை, 18 ஜூலை (ஹி.ச)

மதுரை பெருங்குடி தனியார் விடுதியில் யங் இந்தியா தொழில் முனைவோர் அமைப்பின் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் சூழல் உலகளாவிய சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியும் எனும் தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார்.

சிறப்புரையில் அவர் கூறியதாவது,

உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான் பதற்றம், சரக்குக் கப்பல்கள் சரியான நேரத்தில் வந்து சேராதது, எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாகத் திகழ்கிறது.

நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு

(Digital Public Infrastructure) சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. யுபிஐ (UPI) தளம் ஒவ்வொரு மாதமும் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைக் கையாள்கிறது.

இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன.

2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் தலைமையில், அரசு தன்னை ஒரு கட்டுப்பாட்டாளராக பார்க்காமல், தொழில்களை ஊக்குவிக்கும் அமைப்பாக மாற்றி அமைத்துள்ளது.

அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) அரசு தொடர் ஆதரவை வழங்கி வருகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரப் பற்றாக்குறை இருந்தது. ஒரு சாதாரண தொலைபேசி இணைப்பு பெற நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை தேவைப்பட்டது.

ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்தும் உங்கள் கைபேசியிலேயே சாத்தியமாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டுத் தொழில்முனைவோர் கூட இந்தியாவின் MSME-களுடன் இணைய விரும்புகிறார்கள். எனவே, இந்தத் தலைமுறை இளைஞர்கள் தங்களது தயக்கங்களை உடைத்து முன்வர வேண்டும்.

நமது புனித திருவள்ளுவரின் உன்னதமான வரிகளை நாம் இங்கு நினைவுகூர வேண்டும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.

(தண்ணீரின் உயரத்திற்கு ஏற்ப தாமரை மலரின் தண்டு நீள்வது போல, மனிதர்களின் உள்ளத்து ஊக்கத்தின் அளவிற்கேற்பவே அவர்களின் உயர்வு அமையும்.)

சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நமது முயற்சியின் மூலம் அவற்றைக் கடந்து நாம் உயர முடியும் என்பதற்கு இந்த அரசு எடுத்துள்ள திட்டங்களே சான்று.

நாட்டின் பின்தங்கிய 114 மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை 'லட்சிய மாவட்டங்கள்' என்று அழைத்து, அனைத்து அரசுத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தினோம்.

தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்கள் இதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையில் உள்ளன. சிட்பி (SIDBI) வங்கி விருதுநகரில் ஒரு பிரிவைத் தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற 'விருதுநகர் வத்தல்' (மிளகாய்) வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இப்பகுதி விவசாயிகள் மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி போன்ற பாரம்பரிய, ஊட்டச்சத்துமிக்க நெல் ரகங்களை மீட்டெடுத்து, அழகாக பேக்கேஜிங் செய்து சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர்.

நாம் நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் தயக்கமும், தோல்வி பயமுமே நமக்கான எல்லைகள். தொழில்முனைவோர் இந்தத் தடைகளை உடைக்க வேண்டும்.

வள்ளுவர் கூறுவது போல முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை புகுத்தி விடும். (விடாமுயற்சி செல்வத்தைப் பெருக்கும், முயற்சியில்லாமை வறுமையைச் சேர்க்கும்.)

மதுரையின் வரலாற்றைக் கூறும் கங்காதேவியின் புகழ்பெற்ற 'மதுரா விஜயம்' ஆவணத்தை நாம் நினைவுகூர வேண்டும். விஜயநகர பேரரசர் குமார கம்பணாவின் மனைவியான கங்காதேவி, மதுரை எதிர்கொண்ட படையெடுப்புகளையும், அழிவுகளையும், பின்னர் அது எவ்வாறு வீரியத்துடன் மீண்டெழுந்தது என்பதையும் அதில் பதிவு செய்துள்ளார்.

இன்று இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது. பிரான்சில் நடைபெறும் சர்வதேச 'ஐடிஇஆர்' (ITER) அணுக்கரு இணைவு ஆராய்ச்சித் திட்டத்தில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் இந்தியப் பொறியாளர்கள் இந்த அதிநவீன எதிர்கால தொழில்நுட்பத்திற்கான மாபெரும் அணுக்கரு கருவிகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர்.

உலகின் மிக முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்தியாவின் கொடியும் அங்குப் பெருமையுடன் பறக்கிறது. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா ஆகிய இரு துருவப் பகுதிகளிலும் இந்தியா தனது ஆராய்ச்சிப் பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விண்வெளியில், நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்தவொரு நாடும் கால் வைக்காத இடத்தில் இந்தியா தனது முத்திரையைப் பதித்து சாதனை படைத்துள்ளது.

இத்தகைய அசாதாரணமான சாதனைகளில் நீங்களும் ஒரு பங்காக மாற வேண்டாமா? தைரியமாக உருவாக்குங்கள், பொறுப்புடன் உருவாக்குங்கள். இந்தியாவிற்காகவும், உலகிற்காகவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்காகவும் உருவாக்குங்கள்.

விக்சித் பாரத் 2047 (வளர்ந்த இந்தியா 2047) இலக்கை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம்!

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b