Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜூலை (ஹி.ச)
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலநிலை மற்றும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் , போராட்ட தளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் செயற்பாட்டாளரின் மோசமடைந்து வரும் உடல்நிலை குறித்த மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர் சுயநினைவுடனும் மருத்துவ ரீதியாக நிலையாகவும் இருப்பதாகவும், ஆனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுவதாகவும், தொடர்ந்து ஆலோசனை வழங்கியும் வாய்வழி மற்றும் நரம்பு வழி நீரேற்ற சிகிச்சையை மறுத்து வருவதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாரு பம்பா தெரிவித்தார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி காவல்துறை நேற்று காலை மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மூலம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு மாற்றியது.
மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளான நாளை (திங்கட்கிழமை ஜூலை 20) வாங்சுக் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்ததற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்), இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவர் சங்கம் (ஐசா) உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த போராட்டக்காரர்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆசாத் சமாஜ் கட்சி (கான்சிராம்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகர் ஆசாத் இன்று அதிகாலையில் ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுடன் இணைந்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b