Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 19 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை முழுமையாக திறந்து அரிசி விநியோகம் சரியாக நடக்க வேண்டும். தற்போதுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்டும். மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறார்கள். இதற்கான தொகையை பயனீட்டாளர்களிடம் வசூலிக்க உள்ளார்களா. மின்சாரத் துறையை தனியாரிடம் தரப்போகிறார்களா என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
தனியாரிடம் தர முதல்கட்ட நடவடிக்கை எடுக்கிறீர்களா என்பதை ஆளுநர் பதில் உடன் தர வேண்டும். புஷ்கர் விழா புதுச்சேரி திருக்காஞ்சியில் கொண்டாட வேண்டும். இங்கு நடத்தாமல் சிறிய பகுதியான ஏனாமில் நடத்த கொண்டு செல்கிறார்கள். இதற்காக மத்திய அரசு ஒதுக்குவதாக தெரிவித்துள்ள ரூ.48 கோடியை புதுச்சேரியில் பயன்படுத்த வேண்டும்.
திருக்காஞ்சியில் ரூ.200 கோடி அளவுக்கு பெரிய விழாவாக புஷ்கர் விழா நடத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து மக்களை புதுச்சேரி அரசு ஏமாற்றுவதாக அர்த்தம். போலி மருந்து தொழிற்சாலையில் பிடிப்போரை புதுச்சேரியில் உடன் விடுவித்துவிடுகிறார்கள். கடந்த முறை சிபிசிஐடி நன்றாக வேலை செய்த நிலையில் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
அவர்களுக்கு லஞ்சம் தந்தோர், உடன் சென்ற போலீஸ்காரர், பின்னால் இருக்கும் அரசியல்வாதி, எம்எல்ஏ யார் என்பதை வெளியிடவேண்டும். புதுச்சேரி அரசு முழு ஆதரவுடன் போலி மருந்து உற்பத்தி, கடத்தல் நடக்கிறது. போலி மருந்து வெளி மாநிலங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இவ்விஷயத்தில் தமிழகத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் உரிய நடவடிக்கையை அந்த அரசு எடுக்கும்.
புதுச்சேரியில் அடுத்த தேர்தலே தேவையில்லை. முதல்வருக்கு மட்டும் தேர்தல் வைத்தால் போதும். அவரே அனைத்தும் வைத்துகொள்வார். அனைத்து அதிகாரங்களும் தனக்கு வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். காட்டு அரசாங்கம் தான் நடக்கிறது மக்கள் தான் பார்க்க வேண்டும்
என்று கூறினார்.
பாஜகவுடன் திமுக கூட்டணி என்று அமைக்க உள்ளதாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். முதலில் வெளியே வரட்டும் அதன் பிறகு தெரியும்- திமுக ஆதரவுோடு புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையுமா என்று கேள்வி கேளுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் புதுச்சேரியில் தான் முதலில் இதுபோல் அமையும் என்றார்.
புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணி இருக்குமா. வரும் இடைத் தேர்தலில் நட்பு போட்டி தொடருமா எனக் கேட்டதற்கு, நிலைப்பாடு பின்னர் தெரிவிக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரியும். நட்பு போட்டி நிச்சயம் இருக்காது என்று கூறினார்.
பேட்டியின்போது எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், அனந்த ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b