Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜூலை (ஹி.ச.)
நாட்டின் அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தேசப் பற்றை வலியுறுத்தும் வகையில், வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையிலான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இந்த கூட்டத்தொடர் நடைபெறுவதால், அவையில் அனல் பறக்கும் விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, எதிர்க்கட்சிகள் தரப்பில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க தயாராகி வருகின்றன. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மேலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இந்த மழைக்கால கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b