Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 20) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே வைஷ்ணோ தேவி கோவில் அமைந்துள்ள ரியாசி மாவட்டம் மற்றும் காத்ரா பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதனால் யாத்திரை செல்லும் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பாதைகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து யாத்திரையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், காத்ரா அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் வானிலை நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வானிலை சீராகி, மலைப்பாதைகள் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னரே யாத்திரை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b