Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 22 ஜூலை (ஹி.ச.)
சண்டிகரில் நடைபெற்று வரும் 16-வது பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யோகா அமர்வில், 21 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
பிரிக்ஸ் அமைப்பின் சுகாதார செயல்திட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் மற்றும் பாரம்பரிய, நிரப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் வகையிலேயே இந்த யோகா அமர்வு ஒருங்கிணைக்கப்பட்டது. பிரிக்ஸ் மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் யோகா அமர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தொடர் முயற்சியின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தை அறிவித்தது. இன்று உலகம் முழுவதும் யோகா அங்கீகரிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருவதற்கு இதுவே சான்று.
இன்றைய அமர்வில் அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் காட்டிய ஆர்வம், யோகாவின் மீதான உலகளாவிய ஈர்ப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறையால் பெருகி வரும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற வாழ்வியல் நோய்களைத் தடுப்பதற்கு யோகா ஒரு சிறந்த தடுப்பு மருந்தாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b