Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 23 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கைத்தறி தொழிலாளர்கள் நலன், அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கைத்தறி தொழிலாளர்களுக்கான ‘நேதன்னா பரோசா’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் 50 வயதுக்குட்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசில் 3,168 அரசு பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட்டது.
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அமைச்சரவை துணைக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும், நெரடி தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்கு ரூ.641.10 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
எச்.என்.எஸ்.எஸ். 2-ம் கட்ட பணிகளுக்கான அதிகரிக்கப்பட்ட மதிப்பீட்டு தொகையான ரூ.312 கோடிக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
புஷ்கர விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போகாபுரம் விமான நிலையப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுதவிர, வேதுள்ளப்பள்ளியில் காது கேளாத மாணவர்களுக்காக சிறப்பு அரசு பட்டப்படிப்பு கல்லூரி அமைக்கவும், ஸ்ரீகாகுளத்தில் பிரம்மகுமாரீஸ் அமைப்புக்கு வழங்கப்பட்ட நகராட்சி நில குத்தகையை தொடரவும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆந்திர மாநில மார்க்ஃபெட் நிறுவனத்துக்கு மத்திய வங்கியில் இருந்து ரூ.300 கோடி கடன் பெறுவதற்கு அரசு உத்தரவாதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
விஷ்ணு மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் சலபதி பல்கலைக்கழகங்களை தனியார் பல்கலைக்கழக பட்டியலில் சேர்ப்பது தொடர்பான ஆணை குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA