Enter your Email Address to subscribe to our newsletters

உத்தராகண்ட், 23 ஜூலை (ஹி.ச)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை வரலாற்று சிறப்புமிக்கதாகவும், தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் வர்ணித்துள்ள அவர், இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்று பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவித்த முதல்வர் தாமி கூறுகையில்,
நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களின் கடின உழைப்பையும், கனவுகளையும் சிதைத்து வருவதாகவும், இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசின் இந்த அதிரடி முடிவு பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் மூலம், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விரைவில் உறுதி செய்யப்படும், தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும், மேலும் மாணவர்களின் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற பிரதமர் மோடியின் உறுதியான நிலைப்பாட்டை முதல்வர் தாமி வரவேற்றார்.
உத்தராகண்ட் மாநிலமே கடந்த காலங்களில் UKSSSC உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவு பிரச்சினைகளை எதிர்கொண்டு, அதற்காக நாட்டிலேயே மிகக் கடுமையான நகல் எதிர்ப்பு சட்டத்தை அமல்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ள நிலையில், பிரதமரின் இந்த தேசிய அளவிலான முடிவு மாநில அரசின் முயற்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் முதல்வர் தாமி கூறினார். இந்த தொலைநோக்கு முடிவுக்காக உத்தராகண்ட் மக்கள் சார்பாக பிரதமருக்கு தனது மனமார்ந்த நன்றியை தாமி தெரிவித்துக் கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b