Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 25 ஜூலை (ஹி.ச.)
குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அகமதாபாத் - விரம்காம் நெடுஞ்சாலை இன்று மூடப்பட்டதாக அகமதாபாத் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
சனந்த் முதல் விரம்காம் வரையிலான இரு திசைகளிலும் வாகனப் போக்குவரத்து பாதுகாப்பற்றது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சனந்திலிருந்து விரம்காமுக்கும், விரம்காமிலிருந்து சனந்துக்கும் எந்த வாகனமும் செல்வது பாதுகாப்பானது அல்ல. தற்போதைக்கு நெடுஞ்சாலை முழுவதையும் மூடுகிறோம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் பவ்யா வர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர் மழை பெய்து வந்தாலும் மாவட்டத்தின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் தோல்கா மற்றும் விரம்காம் பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாகவும், அங்கு கடந்த எட்டு மணி நேரமாக மழை இல்லை என்றும், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும் நிலையில், வல்சாட் மாவட்டத்தின் உமர்காம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b