Enter your Email Address to subscribe to our newsletters

சிதம்பரம், 25 ஜூலை (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பெருந்துறை என்றழைக்கப்படும் திருப்பாற்கடல் மடத்தில் உள்ள ஆத்மநாதர் கோயிலில் சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்கவாசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.
இங்குள்ள மாணிக்கவாசகர் பர்ணசாலையில் திருவாசகம் எழுத்து வேள்வி இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. 1100 சிவனடியார்கள் மற்றும் காமராஜர் மெட்ரிக் பள்ளி 50 ஆசிரியர்கள், 250 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திருவாசகம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நரசிங்க பெருமாள் முன்னிலையில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் மு.செங்குட்டுவன், இரா.முத்துக்குமாரசன், புலவர் என்.கருணாநிதி, உமா.பாலசுப்பிரமணியன், ஆசிரியர் அருணாசலம், இரா.சவுந்தர லட்சுமி, புவனகிரி இராஜாமணி, சுதர்சன், ஆலய நிர்வாகி பசவராஜ் உள்ளிட்ட தில்லை திருப்பெருந்துறை திருவாசக அடியார்கள் செய்திருந்தனர்.
பின்னர் ஆத்மநாதர் மற்றும் குரு நமச்சிவாயர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சிவனடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், இன்று திருவண்ணாமலை திருவாசக தென்றல் சிவக்குமார் ஏற்பாட்டின் பேரில் 22 நாடுகளில் ஒரே நேரத்தில் திருவாசகம் 10 பாடல்கள் எழுதும் வேள்வி விழா நடைபெறவுள்ளது.
உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேல் எழுத நிர்ணயம் செய்து இப்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதே நேரத்தில் திருவாசகம் எழுதும் வேள்வியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b