பீகாரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தால் முழு அடைப்பு - பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிப்பு
பீஹார், 25 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில்
நீட் எதிர்ப்பு - பீகாரில் முழு அடைப்பு போராட்டம்: பலத்த பாதுகாப்பு குவிப்பு


பீஹார், 25 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முக்கிய இடங்களில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினரின் இருப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க உணர்திறன் மிக்க பகுதிகளில் சிறப்பு காவல் படையினர் நிறுத்தப்பட்டு, அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காந்தி மைதானத்தில் இருந்து வெளியாகியுள்ள காட்சிகளில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

இதனிடையே, முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய மாணவர் சங்கத்தைச் (AISA) சேர்ந்தவர்கள் சமஸ்திபூர் - பாட்னா பிரதான சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய அவர்கள், இந்த முறைகேட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Hindusthan Samachar / vidya.b