Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 26 ஜூலை (ஹி.ச.)
தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புனித குகைக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.
57 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி யாத்திரை நிறைவடைய உள்ளது.
இதற்கிடையில் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு நாட்கள் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கடந்த ஜூலை 19-ம் தேதி பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களிலும் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
யூனியன் பிரதேசம் முழுவதும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வானிலை சீரானதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ஆறு நாள் இடைநிறுத்தத்திற்கு பிறகு வானிலை மற்றும் தரை நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து புதிய பக்தர்கள் குழு பலத்த பாதுகாப்புடன் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி புறப்பட்டது.
அந்த வகையில் 19-வது பக்தர்கள் குழு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சந்தர்கோட்டை கடந்து சென்றது.
இன்று அதிகாலை ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து புறப்பட்ட பக்தர்களின் வாகன அணிவகுப்பு, உதம்பூரை கடந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி சென்றது.
பஹல்காம் வழித்தடத்தில் தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த வழித்தடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால் ஜம்முவில் இருந்து புறப்படும் பக்தர்கள் பால்டால் வழித்தடத்தில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b