Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 26 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக மூத்த பா.ஜ.க. தலைவர் பிரஹ்லாத் ஜோஷி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 36 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்ததாக தர்மேந்திர பிரதான் சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ மூலம் அறிவித்தார்.
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்வித்துறையின் கூடுதல் பொறுப்பு பிரஹ்லாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொறுப்பேற்ற பிறகு சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிரஹ்லாத் ஜோஷி, “மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது பெருமைக்குரிய தருணம்.
என்மீது நம்பிக்கை வைத்து இந்த முக்கிய பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணிவுடனும் முழு அர்ப்பணிப்புடனும் மாணவர்களின் நலன் மற்றும் நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” என்று கூறினார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரஹ்லாத் ஜோஷி, தார்வாட் மக்களவைத் தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் மந்திரியாக பணியாற்றிய அவர், தற்போது நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளையும் கவனித்து வருகிறார்.
அந்தப் பொறுப்புகளுடன் கல்வித்துறையின் கூடுதல் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA