கல்விச் சீர்திருத்தங்கள் இனி தேர்வு முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் நாரா லோகேஷ் அறிவுறுத்தல்
அமராவதி , 27 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இனி மாணவர்களின் கல்வித் திறனையும் தேர்வு முடிவுகளையும் மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில கல்வித்துறை அ
A


அமராவதி , 27 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இனி மாணவர்களின் கல்வித் திறனையும் தேர்வு முடிவுகளையும் மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிருஷ்ணா மாவட்டம் கங்கிபாடு ஒன்றியத்தில் உள்ள புனாதிபாடு மாவட்ட பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியின் அடிப்படை வசதிகள், கற்பித்தல் தரம் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவர், 10-ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, கடந்த ஆண்டு பள்ளியின் தேர்ச்சி விகிதம் 67 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், அது மாநில சராசரியை விட 11 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் கடினமாக உழைத்து சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிப்பு வாழ்க்கையின் முக்கியமான கட்டங்கள் என்பதால் அவற்றில் சிறந்து விளங்குவது எதிர்காலத்திற்கு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு எனது பணிக்கும் குறைந்த மதிப்பெண்கள் அளிப்பார்.

எனவே அனைவரும் நன்றாகப் படித்து சிறந்த முடிவுகளைப் பெற வேண்டும் என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து, பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம் மற்றும் 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மாணவர் மித்ரா கிட்' குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

மதிய உணவின் தரம் திருப்திகரமாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ராகி கூழைவிட 'சிக்கி' இனிப்பையே அதிக மாணவர்கள் விரும்புவதாகவும் தெரியவந்தது.

பள்ளியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்தபோதிலும், மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைவாக இருப்பது குறித்து அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.

நல்ல வசதிகளும், ஆசிரியர்களும் இருந்தும் எதிர்பார்த்த கல்வி முடிவுகள் கிடைக்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய அவர், பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனுமதியின்றி ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

கல்வி அமைப்பில் கட்டமைப்பு வசதிகளும், தரமான கற்பித்தலும் சமமாக முக்கியம் என்று வலியுறுத்திய அமைச்சர், தொழிற்கல்வி ஆய்வகங்களை மேம்படுத்தவும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய கவனம் அளிக்கவும், பள்ளி வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

340 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் தேர்வு முடிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் நாரா லோகேஷ் உத்தரவிட்டார்.

பின்னர் 9-ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA