Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 29 ஜூலை (ஹி.ச.)
போகாபுரம் அல்லூரி சீதாராமராஜு சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து முக்கியப் பணிகளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டதாகவும், அதற்கான புகழை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனதாக்க முயற்சிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு, தேவையான அனுமதிகள் எதுவும் பெறாமல் வெறும் அடிக்கல் நாட்டியதைத் தவிர சந்திரபாபு அரசு வேறு எந்தப் பணியையும் செய்யவில்லை.
ஆனால், 2020-ம் ஆண்டு ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, நிலம் கையகப்படுத்தியது, பாதுகாப்பு அனுமதிகளைப் பெற்றது, விமான நிலையத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடைபெற்றன.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. மேலும், குடிநீர், மின்சாரம், சாலை இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.1,200 கோடி செலவிடப்பட்டது.
கொரோனா பரவல் காலத்திலும் ஓடுபாதை மற்றும் முனையக் கட்டடப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, 2026-ம் ஆண்டில் விமான சேவை தொடங்கும் என்று அப்போதே அறிவிக்கப்பட்டது.
தற்போது தாங்கள் மேற்கொண்ட பணிகளின் பலன் கிடைத்து வரும் நிலையில், அதற்கான புகழை சந்திரபாபு நாயுடு பெற முயற்சிப்பதாகவும், வளர்ச்சியை விட புகழைப் பெறுவதிலேயே அவர் அதிக கவனம் செலுத்துகிறார்,
என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA