Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 29 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுத் தீவனத்தின் விலை கடந்த சில வாரங்களில் ரூபாய் 50 முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
போதிய பருவமழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்களில் பசுமையான புற்கள் கூட முளைக்காத சூழல் நிலவுகிறது.
இதனால் இயற்கையாக கிடைக்க வேண்டிய தீவனமும் கிடைக்காமல், விவசாயிகள் முழுவதுமாக கடைகளில் விற்கப்படும் வைக்கோல், புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட தீவனங்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலைப் பயன்படுத்தி தீவன விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தீவனச் செலவை சமாளிக்க முடியாமலும், மாடுகளை பராமரிக்க முடியாமலும் திணறும் விவசாயிகள் பலர், தங்கள் கால்நடைகளை விற்க முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மாட்டுச் சந்தைக்கு வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
தங்கள் மாடுகளை விற்க விவசாயிகள் முண்டியடித்ததால் சந்தையில் பரபரப்பு நிலவியது.
விலைவாசி உயர்விலிருந்து தங்களை காக்க மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்கவும், கால்நடை வளர்ப்போருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b