Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது ஆஷிக். இவர், தனது தாய் சாய்ராபானுவை புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அமைந்தகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் தாசப்பிரகாஷ் அருகே சென்றபோது, பின்னால் சிமெண்ட் கலவையுடன் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
இந்த விபத்தில் சாய்ராபானு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முகமது ஆஷிக் காயங்களுடன் உயிர்தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சாய்ராபானுவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குப் பின்னர் லாரியை நிறுத்தாமல் தப்பிச் சென்ற ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ