Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 ஜூலை (ஹி.ச.)
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தகுதி நீக்க மனு தொடர்பான ஏப்ரல் 13 விசாரணையின் காணொளிகள் பரவுவது குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கிற்கு பதிலளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது,
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ் யூடியூப் ஒரு இடைத்தரகராகக் கருதப்படுவதாகவும், உள்ளடக்கத்தைப் பதிவேற்றுபவர்களே அதற்குப் பொறுப்பு, தளம் அல்ல.
நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகள் மீண்டும் பதிவேற்றப்படுவதைத் தடுக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும், இணங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிடக் கோரும் மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல, தெளிவற்றது மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது.
நீதிமன்ற நடவடிக்கைகள் பொதுவாக யூடியூப் தளத்திற்கு வெளியே மூன்றாம் தரப்பினரால் பதிவு செய்யப்படுவதாகவும், பதிவேற்றப்படும் காணொளி நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பானதா, அங்கீகரிக்கப்படாததா அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சட்டத்தையும் மீறுகிறதா என்பதைத் தீர்மானிக்க யூடியூபிடம் எந்தவிதமான வழிமுறையும் இல்லை.
நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கான விதிகள் நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் மாறுபடும்.
தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒரு உள்ளடக்கத்தை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த பின்னர், குறிப்பிட்ட URL-களுக்கான அணுகலை முடக்குவது மட்டுமே யூடியூபின் கடமை. அங்கீகரிக்கப்படாத பதிவுகளை அடையாளம் காணவோ அல்லது எதிர்கால பதிவேற்றங்களைத் தடுக்கவோ கோடிக்கணக்கான காணொளிகளை முன்கூட்டியே திரையிட முடியாது.
மனுவில் அடையாளம் காணப்பட்ட ஒன்பது யூடியூப் URL-களில் பல, 2026 ஏப்ரல் 23 தேதியிட்ட உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு முன்னரே இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மீதமுள்ள URL-களை முன்னெச்சரிக்கையாக கூகுள் தடை செய்தது. அதன் பிறகு, குறிப்பிட்ட பதிவுகள் கொண்ட கூடுதல் URL-கள் எதுவும் மனுதாரரால் தெரிவிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.
எதிர்கால பதிவேற்றங்களைக் கண்காணிக்க அல்லது தடுக்கக் கோரும் பரந்த உத்தரவுகள் கருத்துச் சுதந்திரத்தில் தணிக்கை விளைவை ஏற்படுத்தும். அது நிறுவப்பட்ட சட்டத்திற்கு முரணானது.
உள்ளடக்கத்தை நீக்குவதற்கான உத்தரவுகள், இடைத்தரகர்களை விட, கருத்து கேட்க வாய்ப்பு அளித்த பின், முதன்மையாக உருவாக்கியவர்கள் அல்லது வெளியிட்டவர்களுக்கே அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, கூகுள் தொடர்பாக மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b