Enter your Email Address to subscribe to our newsletters

தார்வாட், 09 ஜூலை (ஹி.ச)
கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டம் யல்லாபுரா தாலுகாவில் உள்ள அரபைல் காட் பகுதியில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் தார்வாட்டைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தார்வாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டெம்போ குரூஸர் எனும் மல்டி யூட்டிலிட்டி வாகனத்தில் தர்மஸ்தலா உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு யாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
அரபைல் காட் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரியுடன் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் தீவிரத்தில் வாகனம் முற்றிலும் நொறுங்கியது.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, உயிரிழந்த அனைவரும் தார்வாட்டைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஓட்டுநர் சஞ்சய் அங்காடி (33), பசவராஜ் (48), அபிஷேக் ஈஸ்வர் (28), அக்ஷய் (26), அபிஷேக் (26) மற்றும் மஞ்சுநாத் சுலகி (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நந்தி கிரிதாமா காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஓட்டுநரின் கண் அயர்வு அல்லது மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தார்வாட்டில் இருந்து புனித யாத்திரைக்கு புறப்பட்டவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b