Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் வட ஆந்திராவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போகாபுரம் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து திறந்து வைத்தார்.
இந்த தொடக்க விழாவில் ஆந்திர மாநில ஆளுநர் நீதிபதி நசீர், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராம்மோகன் நாயுடு, பெம்மசானி சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமான நிலைய திறப்பு விழாவை தொடர்ந்து, பிரதமர் மோடி முனையக் கட்டிடத்தை பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை ஆய்வு செய்தார். விமான நிலையத்தின் சிறப்புகள், கட்டுமான பணிகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஜிஎம்ஆர் குழும தலைவர் ஜி. மல்லிகார்ஜுன ராவ் மற்றும் வணிகப் பிரிவு தலைவர் ஜிபிஎஸ் ராஜு ஆகியோர் பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, வட ஆந்திராவின் கலை மற்றும் கலாசார பெருமையை பிரதிபலிக்கும் வகையில் புகழ்பெற்ற பொப்பிலி வீணையை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக, விழா நடைபெறும் இடத்துக்கு திறந்த ஜீப்பில் சென்ற பிரதமர் மோடி, வழியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். சமீபத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்த திம்சா நடன நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் பங்கேற்ற இந்த நடனத்தை பிரதமர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் பொதுமக்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA