கோவையில் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டமளிப்பு விழா!
கோவை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்,கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத்தலைவர் நாராயணன் ராமசாமி அவர்கள
Graduation


கோவை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்,கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத்தலைவர் நாராயணன் ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது,

மாணவிகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.

தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்று கூறினார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும் போது,

கல்வி என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தருவது. தொடர் உழைப்பின் பலனாகப் பட்டம் பெறும் மாணவிகள், தங்களுடைய திறமைகளைத் தனக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் உதவக்கூடியதாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய அவர்,

மாணவிகளின் வாழ்க்கையில் வெற்றிகளையும் பலவித முன்னேற்றங்களையும் பெற வாழ்த்தினார்.

முதல்வர் முனைவர் சித்ரா கல்லூரி மற்றும் மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசினார்.

4 தங்கப்பதக்கங்கள் உட்பட பல்கலைக்கழக அளவில் 12 சிறப்பிடங்களைக் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளதோடு, இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 634 பேர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலரும் கல்லூரியின் செயலருமான சி.வி.ராம்குமார் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN