Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர் , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வரும் நிலையில், ஒடிசாவில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொடர் கனமழை காரணமாக மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசாவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA