Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் உயரிய அங்கீகாரமான முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகளை முதலமைச்சர் விஜய் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் இன்று வழங்கி சிறப்பித்தார்.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மக்கள் நலன் சார்ந்த புதுமையான திட்டங்கள் மற்றும் சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக பணியாற்றியவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டிற்கான விருது பெற்றவர்களில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முக்கிய இடம் பிடித்துள்ளார்.
மாவட்டத்தில் சிறப்பான நிர்வாகத்தை வெளிப்படுத்தியதற்காகவும், மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக மேற்கொண்ட தனித்துவமான முயற்சிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தூய்மைப் பணி குழுவினருக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட நவீன தூய்மைப் பணி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தி, பயணிகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான சூழலை உருவாக்கியதை பாராட்டி இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.
மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலிக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைந்த எடை கொண்ட, நவீன தொழில்நுட்பத்திலான செயற்கை உறுப்புகளை தயாரித்து வழங்கிய அவரது முன்மாதிரியான சேவையை பாராட்டி முதலமைச்சர் விஜய் இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற அனைவருக்கும் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b