Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்மண்டலக் குழு முதலமைச்சர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், வழக்கமாக புதுச்சேரி சார்பில் முதலமைச்சர் கலந்து கொள்வார். ஆனால் இந்த முறை முதலமைச்சர் ரங்கசாமி மாநாட்டை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் பங்கேற்காத சூழலில், அவருக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், மாநாட்டிற்கான அழைப்பு முதலமைச்சருக்கு மட்டுமின்றி துணைநிலை ஆளுநருக்கும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே துணைநிலை ஆளுநர் பங்கேற்க உள்ளார்.
முதலமைச்சர் ரங்கசாமி ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த நிகழ்வு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுச்சேரி ஒன்றிய பிரதேசம் என்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் அதிகாரங்களை விட, மத்திய அரசால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநருக்கே கூடுதல் நிருவாகக் கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிர்வாக ரீதியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றுவது, கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது போன்றவற்றில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நிலவும் அதிகார மோதலே இந்த மாநாட்டுப் புறக்கணிப்புக்குக் முக்கியக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b