Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் இன்றும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய திடீர் கனமழை பெய்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன.
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்களில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பெய்த அதிக அளவிலான மழை காரணமாக வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. வடிகால் வசதியின்றி தேங்கிய மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்து, மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல மாத உழைப்பு கண்முன்னே வீணாவதை கண்டு அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட வயல்களை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதத்தை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b