Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
அரசியல் நாகரிகத்தின் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதில்,
தமிழகத்திற்கு காவேரி நீரை குறித்த நேரத்திற்கு திறந்து விட மறுத்த உங்கள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் திரு. DK சிவக்குமார் அவர்கள் தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார்.
தமிழகத்தின் குறுவை சாகுபடியை திட்டமிட்டு சீரழித்த அவருக்கு எதிராக, பாஜகவினாலும் போர்க்கொடி தூக்கியிருக்க முடியும். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் எங்களுடன் கரம் கோர்த்திருப்பார்கள்.
ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை, செய்யவும் மாட்டோம். காரணம், நாங்கள் பிறந்த இந்த தமிழ் மண் எங்களுக்கு “விருந்தோம்பலின்” முக்கியத்துவத்தை போதித்துள்ளது.
நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்திப்பதற்காக, அரசு முறைப் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும், கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு உரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை.
தமிழகக் காங்கிரஸாரைக் கூட சந்திக்காமல், அலுவல் ரீதியாக தமிழகம் வந்து, திரும்பும் கர்நாடக முதல்வரின் அரசுப் பயணத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை.
ஆனால், அந்த அரசியல் நாகரிகம் உங்களிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. இதனால் தானோ என்னமோ, இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் உங்கள் கட்சியை வெறுக்கிறார்கள்.
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்களின் அரசுப் பயணத்திற்கு கருப்பு கொடி காட்டி, தமிழகத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க நினைத்த உங்களை, மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN