டெல்லியில் அதிகாலை மழை - வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம்
புதுடெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த மழை, கடும் வெப்பம் மற்றும் புழுக்கத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. தலைநகரில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை
டெல்லியில் அதிகாலை மழை - வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம்


புதுடெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த மழை, கடும் வெப்பம் மற்றும் புழுக்கத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.

தலைநகரில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியில் இன்று வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியைப் பொறுத்தவரை தற்போது கடுமையான சிவப்பு அல்லது ஆரஞ்சு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றாலும், விட்டுவிட்டு மழை பெய்வதுடன் அதிக ஈரப்பதமும் தொடரும் எனத் தெரிகிறது. பருவமழை தாக்கத்தால் ஹரியானாவின் ஜஜ்ஜர் மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது.

அங்கு ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புழுக்கம் நீடித்தாலும், இந்த மழையால் வெப்பம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமாக உள்ளது. இமாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து வண்ணக் குறியீடுகளுடன் கூடிய எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.

இது குறித்து கார்வால் ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் கூறுகையில், கனமழை பெய்து வருகிறது. பருவமழை காலம் பேரிடர் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்து முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார். தொடர் பேரிடர்களுக்கு மத்தியில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 003 உட்பட 166 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் 130 மின்மாற்றிகள் மற்றும் 222 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சாலை இணைப்பைப் பொறுத்தவரை மண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு 84 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஒடிசாவில் மேலும் கனமழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 15 நிலவரப்படி 52 வட்டாரங்களில் உள்ள 429 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 79 மீட்புக் குழுக்கள் களத்தில் உள்ளன. மாநிலத்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் இருப்பதாக மத்திய நீர் ஆணையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b