Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த செவிலியர்கள் தொகுப்பூதிய முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பணி நிரவல் என்ற பெயரில் செவிலியர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் பணிச்சுமையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள், கடந்த 2015-ம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டதாகவும், இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்ட போதிலும் பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தொகுப்பூதியத்திலேயே தொடர்வதாக வேதனை தெரிவித்தனர்.
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அதே பணியை செய்து வரும் தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும், அனைவருக்கும் உடனடியாக பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்பதும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை என்று முழக்கமிட்டனர்.
மேலும் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் பணி நிரவல் நடவடிக்கையால் பல வார்டுகளை ஒரே செவிலியர் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததுடன், கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே தொகுப்பூதிய முறையை முற்றாக ஒழித்து, அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வதுடன், பணி நிரவல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / vidya.b