Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தொடர்புடையவர் முத்தாண்டிகுப்பத்தைச் சேர்ந்த கோபி என்பவர்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நரேஷ்குமார் கொலை சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த கோபியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கோபி கடலூர் அருகே முத்தாண்டிகுப்பம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற கோபி, தான் வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கியுள்ளார்.
இதில் காவலர்கள் சிலருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காலில் காயமடைந்த கோபி சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார். காயமடைந்த அவரை மீட்ட போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதேபோல் கோபி கத்தியால் வெட்டியதில் காயமடைந்த காவலர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b