Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பெத்தி சுதர்ஷன் ரெட்டி விவகாரத்தில் அவருக்கு கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்) குற்றம்சாட்டியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
பெத்தி சுதர்ஷன் ரெட்டி மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என்றும், அரசில் நடைபெற்ற முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்தவர் என்றும் தெரிவித்தார்.
சிவில் சப்ளைஸ் துறை முறைகேடு மற்றும் கல்வித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் பெட்ஸ் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அவர் வெளியிட்டதாகவும், அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வழங்கியதுடன் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியதாகவும் கே.டி.ஆர் கூறினார்.
சுதர்ஷன் ரெட்டி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால், அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அவர் மறைந்த மறுநாளே உச்ச நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசு பி.ஆர்.எஸ். தலைவர்களை குறிவைத்து பொய் வழக்குகள் பதிவு செய்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கே.டி.ஆர் மேலும் குற்றம்சாட்டினார்.
பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) இடஒதுக்கீடு விவகாரம் குறித்து பேசிய அவர்,
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி தடுத்து விட்டதாக முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறுவது தவறானது என்றும், அவர் நிறைவேற்றிய தீர்மானம் வெறும் காகிதமாக மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார்.
குருகுல பள்ளிகளில் மாணவர்கள் உயிரிழப்பு, ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகள் பாதிப்பு உள்ளிட்டவை காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கோதாவரி ஆற்றில் தண்ணீர் கடலில் வீணாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான நீர் வழங்கப்படவில்லை என்றும் கே.டி.ஆர் விமர்சித்தார்.
மெட்ரோ திட்டத்தை அரசு கையகப்படுத்துவதன் பின்னால் ரூ.200 கோடி முறைகேடு செய்யும் திட்டம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA