Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையில் 24 மணி நேரத்திற்குள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாமணி காவல்துறையினர், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று நள்ளிரவில் மதுரை மாநகர் சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
24 மணி நேரத்திற்குள் மதுரை மாநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் அரங்கேறியுள்ளதால், மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா அல்லது தனித்தனி காரணங்களால் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam