Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகரில் இருந்து புறப்பட்ட அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப் படத்துடனான அமைதி ஊர்வலம், நான்காம் கேட் மற்றும் புதிய பேருந்து நிலையம் வழியாக எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட படத்திற்கும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநிலப் பொறியாளர் அணித் துணைச் செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசுவாமி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட படங்களுக்குப் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b