Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனப் பதிவு பணிகள் நிறைவடைந்த நாளிலேயே, பொதுமக்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும், செப்டம்பர் 12ஆம் தேதிக்குப் பிறகு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பும் பழைய நடைமுறை நிறுத்தப்பட உள்ளது. அதற்கு பதிலாக, முழுமையான டிஜிட்டல் ஆவண முறை அமல்படுத்தப்பட உள்ளது.
டிஜிட்டல் ஆவணங்களில் கியூஆர் குறியீடு இடம்பெறும் என்பதால், ஆவணத்தின் உண்மைத்தன்மையை விரைவாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்களைத் தடுப்பதுடன், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் எளிதான சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின்படி, 13.09.2026 முதல் ஓராண்டுக்கு, பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam