Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர் , 06 செப்டம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கடும் சேதமடைந்துள்ளன.
குறுவை சாகுபடி செய்து, அறுவடைக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு இந்த எதிர்பாராத மழை பேரிடியாக அமைந்துள்ளது. நன்னிலம், கூத்தாநல்லூர், மூங்கில்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், நன்கு விளைந்து முற்றிய நெற்கதிர்கள் அனைத்தும் தரையோடு சாய்ந்துள்ளன. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல மாதங்கள் பாடுபட்டு, கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் வேதனையிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதால், அறுவடைப் பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் ஆய்வு செய்து, பாதிப்பின் தன்மையை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b