Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கழகப் பணிகள் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
100 நாள் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் படுமோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக விமர்சித்தார்.
வரலாற்றில் வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருப்பதாகவும், மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும், 110 விதியின் கீழ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மாயபிம்பமாக கட்டமைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த 118 நாட்களில் தமிழ்நாடு என்ன நிலைமைக்கு சீரழிந்து போயுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்த ஆர்.பி.உதயகுமார், ஒரு அரசு அமைந்தவுடன் இவ்வளவு போராட்டங்களை பார்த்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள், மாணவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏதோ ஒரு மாயாஜாலத்தில் இந்த ஆட்சி வந்துவிட்டதாகவும், இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதுகுறித்து பேசுவார்களா என பதிலளித்தார்.
இனி வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் சென்று வெற்றி பெற வேண்டும் என்றும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் ஆலோசனை வழங்கியதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ