Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
சர்க்காரியா கமிஷன் தொடர்பான சட்டமன்ற நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேயான மோதலில் அப்பட்டமான நாடக வாடை வீசுவதாக அதிமுக எம்பி இன்பதுரை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சர்க்காரியா கமிஷன் என்பது அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் அளித்த புகாரின் அடிப்படையில், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களை விசாரிப்பதற்காக இந்த ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 28 குற்றச்சாட்டுகளில், மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான குற்றச்சாட்டும் இடம்பெற்றிருந்ததாக இன்பதுரை தெரிவித்துள்ளார்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் அழைப்பின் பேரில், 2006-ம் ஆண்டு பொங்கல் தபால்தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி வரை சென்று சிறப்பித்தவர் இன்றைய முதலமைச்சர் விஜய் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இருக்கும்போது, ஆடு பகை குட்டி உறவா அல்லது சர்க்காரியா கமிஷன் விசாரணையின் விவரங்களை விஜய் அப்போது அறியாதவரா என இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் ஒருவர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டுப் பேசியதற்கே விஜய் கோபப் பார்வை வீசியதாகவும், பின்னர் அதே பேரவையில் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதன் பின்னணி, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராக அதிமுக அளித்த புகார்களை விசாரிப்பதுதான் என்பதும் விஜய்க்கு தெரியாதா என இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் அரசியல் மோதலில் ஈடுபடுவது ஏன் என்றும், இதன் பின்னணியில் என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ள இன்பதுரை, இந்த விவகாரத்தில் அப்பட்டமான நாடகம் அரங்கேறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ